கோவில்பட்டி அருகே கழுகுமலையில் பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலின் போது சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்வரின் 17 வயது மகன் ஹரிபிரசாத் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு கணக்குப் பதிவியல் பிரிவில் படித்து வருகிறார். இவர் பட்டியலின வகுப்பினை சேர்ந்தவர்.
ஹரிபிரசாத்துடன் அதே பள்ளியில் படிக்கும் ராஜகுரு, ஷேமந்த் குமார், ஆகிய மாணவர்கள் 11ம் வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளிக்கு வெளியே ராஜகுரு, ஹேமந்த் குமார் ஆகிய இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மாணவர் ஹரி பிரசாத் அவர்கள் இருவரையும் சண்டை போட வேண்டாம் என்று கூறி தடுத்துள்ளார். அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
ஆனால், நேற்று இரவு மாணவர் ராஜகுரு அவருடன் 10 பேரை அழைத்துக்கொண்டு லெட்சுமிபுரத்தில் உள்ள ஹரி பிரசாத்தின் வீட்டிற்குச் சென்று அவரை சாதி ரீதியாக திட்டி தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஹரி பிரசாத் காயம் அடைந்துள்ளார். மேலும், அவரது செல்போன் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இந்நிலையில், காயம் அடைந்த ஹரிபிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கழுகுமலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.