தமிழகத்தில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் பந்தல் மற்றும் ( Neermor Pandal ) நீர்மோர் பந்தல்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இருவார காலமாக 13 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து மக்களை வாட்டி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அவர்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரங்க முகப்பிலும், சென்னை திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவன் முகப்பிலும் மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அமைக்கப்படவுள்ளது. இவ்விரு இடங்களிலும் வருகிற மே 1 ஆம் தேதி நீர்மோர் பந்தல்க ளை தொடக்கி வைக்க இருக்கிறேன்.
Also Read : நடிகர் சங்க கட்டிட பணி : நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி..!!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு இதனை நடத்த விரும்புகிறோம். இதை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
சென்னையில் முன்னோட்டமாக நடைபெறவுள்ள நீர்மோர் பந்தல் அமைப்பதைப் போல தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தங்களது பகுதிகளில் பரவலாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு இத்தகைய தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மக்களின் தாகத்தை தீர்க்கிற சேவையில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு ( Neermor Pandal ) வகிப்பதை நோக்கமாக கொண்டு இந்த பணியினை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டுகிறேன் என செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.