வரும் 2024 மக்களவை தேர்தலின் போது தமிழ் நாட்டில் பிரதமர் மோடி போட்டியிடவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிரதமர் மோடியின் சாதனையை விளக்கும் நூலான அர்ஜுன் சம்பத் எழுதிய , எட்ட முடியாத எட்டாண்டு சாதனை என்னும் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக முத்த தலைவர் ஹெச்.ராஜா நூலை வெளியிட, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நூலை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஹெச்.ராஜா பேசுகையில் விரைவில், நவராத்திரி விழா வரப்போகிறது. இந்நிலையில், இந்துக்களின் சக்தி வழிபாட்டை கேவலப்படுத்தி, ஒரு பாதிரியார் ராகுலிடம் விளக்குகிறார். திருச்செந்துறையில், 1,000 ஆண்டுகளுக்கு முன், சோழர்கள் கட்டிய சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. அங்கு வெறும் 20 முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், அந்த கிராமமே, வக்பு வாரியத்துக்கு சொந்தம் என, பதிவுத்துறை கூறியுள்ளது.
திராவிட கட்சி தலைவர் கருணாநிதி, அனைவர் சொல்வதையும் கேட்டாலும், முடிவை அவர் தான் எடுத்தார். ஆனால், ஸ்டாலின் பெயரைச் சொல்லி, எவர் எவரோ முடிவெடுக்கின்றனர். காங்கிரசும், தி.மு.க.,வும், ‘மிஷனரி’களின் கையில் சிக்கிக் கிடக்கின்றன என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் தெரிவிக்கையில் அர்ஜூன் சம்பத், தற்போதுள்ள திராவிட மாடல் ஆட்சியில் தேசியக் கொடி ஏற்றிய ஓமந்துாரார் தோட்டத்தில், அவரின் சிலையோ, புகைப்படமோ இல்லை. கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.
மேலும் திருப்பூர் குமரன் நினைவிடம் அருகில், சிலை வைத்தனர். இப்படி வரலாற்றுத் தலைவர்கள் உள்ள இடங்களில் எல்லாம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி சிலைகளை பெரிது பெரிதாக வைத்து, பொம்மை நாடாக்க பார்க்கின்றனர். காங்கிரசை சேர்ந்த ராகுல், தியாகிகளின் நினைவிடத்துக்குச் செல்லவில்லை; வாரிசுகளைச் சந்திக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்,
மிஷனரிகள் நடத்தும் இடங்களுக்கு மறக்காமல் சென்று வருகிறார். இதிலிருந்து அவரின் நோக்கம் புரிகிறது.தமிழகத்தில் இருந்து வீணாக, 39 பேர் எம்.பி.,யாகி உள்ளனர். அவர்கள், மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்க்கின்றனர்.
இதனை தொடர்ந்து 2024 லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். அப்போது தான், 40 தொகுதிகளும் பாஜக வசம் வரும்; தமிழகம் வளரும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளான தீரன் சின்னமலை, பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, ஜெய்ஹிந்த் செண்பகராமன், பாஷ்யம் அய்யர், நீலகண்ட பிரமச்சாரி, கடலுார் அஞ்சலையம்மாள் உள்ளிட்டோரின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.