நெல்லையில், பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் புறவழிச் சாலை பாலம் அருகே வைர மாளிகை உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு பெண் ஒருவருடன் இளைஞர் சாப்பிட வந்துள்ளார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அந்த இளைஞரை படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ரத்தவெள்ளத்தில் இளைஞர் துடிதுடித்து உயிரிழந்ததைப் பார்த்து அந்தப் பெண் பதறியது அங்கிருந்தவர்களை பரபரப்பில் ஆழ்த்தியது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/nellai-murder-01-1.jpg?resize=1024%2C576&ssl=1)
இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் ஈடுபட்டபோது படுகொலை செய்யப்பட்ட இளைஞர், மூன்றடைப்பு வாகைக் குளத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தீபக்ராஜன் என்பது தெரியவந்தது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/nellai-murder-04.jpg?resize=1024%2C576&ssl=1)
தீபக்ராஜன், பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் என்றும் அவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் போலீசார் தெரிவித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் வில்லங்கமா என்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/nellai-murder-02-1.jpg?resize=1024%2C576&ssl=1)
இரண்டு தினங்களுக்கு முன்பாக இதே போல் கட்டிடத் தொழிலாளி ஒருவர் வேலை முடிந்து வந்த போது இரவில் மர்மநபர்களால், அவரது தாயாரின் கண் எதிரே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/nellai-murder-03-1.jpg?resize=1024%2C576&ssl=1)
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாக, பட்டப்பகலில் மற்றொடு கட்டிடத் தொழிலாளியான இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
தொடரும் கொலைகளுக்கு முடிவுரை எழுதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.