தர்மபுரி தொகுதி தர்மபுரி தொகுதியில் பா.ம.க வேட்பாளர் சவுமியாவுக்கு எதிராக களப்பணி செய்ய மறுத்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேறு மாவட்டத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தீர்த்தராமன். இவர் முன்னாள் எம்.பி. ஆவார். இவர் மீதுதான் பாமகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு, கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி களம் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க., வேட்பாளராக சவுமியா அன்புமணி களம் இறங்கி இருக்கிறார். அதிமுக வேட்பாளரான அசோகனும் வாக்காளர்களை தேடிச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இதையும் படிங்க: அடம் பிடிக்கும் அன்புமணி..! பாஜகவுக்கு பச்சைக் கொடியா..?
திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு கூட்டணி கட்சியினரான காங்கிரசாரும் பிரசாரம் செய்து வரும் நிலையில், மாவட்ட தலைவர் தீர்த்தராமனோ அதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லையாம். காரணம், சௌமியா அன்புமணி வென்றால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதற்காக அவரை வெற்றிபெற வைக்கும் முனைப்பில் பா.ம.கவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரம் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிநிர்வாகிகளுக்கும் அன்புமணி தரப்பில் வலை வீசப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி அன்புமணியின் வலையில் தீர்த்தராமன் சிக்கிவிட்டார் என்றும், அதனால், சவுமியாவுக்கு எதிராக, தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும்கூறப்படுகிறது.
இதனால் தான், சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்திலும் மாவட்ட தலைவர் தீர்த்தராமன் பங்கேற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.இந்தத் தகவல் தெரிய வந்ததும், தீர்த்தராமன் மீது அதிருப்தி அடைந்த, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கேபன்னீர்செல்வம், இந்த விஷயத்தை முதல்வர் வரை கொண்டு செல்ல, அவரோ காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதையடுத்து, தருமபுரியில் இருந்து தீர்த்தராமனை கிளப்ப, கரூர் மக்களவை தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவரை அங்கு தூக்கி அடித்துள்ளனர் என்கிறார்கள் தருமபுரி காங்கிரஸார்.