சென்னை – தூத்துக்குடி(tuticorin to chennai )இடையே விமான சேவை கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.
தென் தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
150 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த அதி கனமழையால், பாபநாசம் ,மணிமுத்தாறு,தாமிரபரணி உள்ளிட்ட ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரம் முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்த கனமழையால் தூத்துக்குடி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்டது. கடந்த 3 நாட்களாக சென்னை – தூத்துக்குடி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடியில் மழை சற்று ஓய்ந்துள்ளது. மேலும், விமான நிலையத்தில் தேங்கி இருந்த வெள்ள நீர் வடிந்ததைத் தொடர்ந்து, விமான நிலையம் முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு பிறகு சென்னை – தூத்துக்குடி இடையே விமான சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து இன்று காலை பயணிகளுடன் தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்தும் சென்னைக்கு இன்று விமானப் போக்குவரத்து தொடங்கியது.