வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் விடுபட்டது தேர்தல் ஆணையத்தின் ஜனநாயகப் படுகொலை என்று ஆவேசம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1லட்சம் ஓட்டைக் காணவில்லை என அண்ணாமலை வடிவேல் காமெடி செய்வதாக விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சென்னை மண்டல அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகளை சந்தித்து தேர்தலை சந்தித்தது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் ஒரு எழுச்சியாக அலை கண்டறியப்பட்டது , மகத்தான வெற்றியை ஜூன் நான்காம் தேதி தமிழக மக்கள் எங்களுக்கு அளிக்கின்ற நிலை உள்ளது
வாக்குப்பதிவு விவரங்களை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் சொதப்பி உள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு என்பது தோல்வியாகி உள்ளது.
100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று எண்ணும் வாக்காளர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை. இது குறித்து பலமுறை அதிமுக சார்பில் அறிவுறுத்தியும், தேர்தல் ஆணையம் எதனையும் செய்யாமல், செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்துள்ளது.
இதனால் பலருடைய வாக்குகளும் வாக்காளர் பட்டியலில் இல்லை.
தேர்தல் நேரம் முடிந்ததும் வெளியான வாக்குப்பதிவு விகிதத்துக்கும் இறுதி வாக்குப்பதிவு விகிதத்துக்கும், இரண்டு அல்லது மூன்று சதவீத வேறுபாடுதான் இருக்கும்.
ஆனால் இந்த முறை 7 முதல் 8 சதவீதம் வரை வேறுபாடு வந்திருப்பது தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்னும் கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல், வாக்களிக்க முடியாதவர்களுக்கு அவர்களது ஜனநாயக உரிமை படுகொலை செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் என்பவர் எல்லோருக்கும்தான் பிரதமர். சிறுபான்மையினர் குறித்த பிரதமரின் மத துவேஷ பேச்சுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
பிரதமரின் வெறுப்பு அரசியல், மத துவேஷ பேச்சுக்கள் அதிமுகவால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இது கண்டனத்துக்குரியது.
சசிகலா அதிமுக சின்னத்தை வைத்து அளித்துள்ள கடிதம் வெற்று காகிதத்திற்கு சமம். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் யாரும் அரசியலில் இல்லை. 20204 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இவர்களின் அத்தியாயம் முடியும் வகையில்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, உங்கள் மகனுக்கு ஆதரவாக நீங்கள் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ஜெயவர்த்தனுக்கு தனிப்பட்ட ஆற்றல் இருக்கிறது. அறிவு உள்ளது எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் துணிச்சலும் உள்ளது என் பையனை அருகில் வைத்துக் கொண்டே அவரைப் பற்றி நான் பெருமை பேச முடியாது…
ஜெயவர்த்தன் தனித்தன்மையோடு தேர்தலை எதிர் கொள்வார் எனவே அவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
“எனது மகன் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்த ஒரு புகைப்படத்தை காண்பித்தாலும் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்றார்.
தொடர்ந்து கோவையில் ஒருலட்சம் ஓட்டுக்கள் காணாமல் போய்விட்டதாக அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், அண்ணாமலை கூறுவது கிணற்றை காணவில்லை என வடிவேல் கூறுவது போல உள்ளது என விமர்சனம் செய்தார்.