சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கடந்த 14.10.23 அன்று எழுத்தர், ஓட்டுநர், உதவியாளர்கள் எனப் பல்வேறு சுங்கத்துறை பணிகளுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு தவிர உத்திரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏறத்தாழ 1600 தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களில் 30 தேர்வர்கள் தொலைதொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியும், ஆள்மாறாட்டம் செய்தும் முறைகேட்டில் ஈடுபட்டது தமிழ்நாட்டு இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
தேர்வு நடத்தும் அதிகாரி உட்பட பலர் வட மாநில தேர்வர்களுக்கு ஆதரவாக முறைகேட்டில் ஈடுபட்ட நிலையில், இதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? எத்தனை ஆண்டுகளாக இத்தகைய முறைகேடுகள் நடைபெறுகிறது? வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வந்து முறைகேடு செய்யும் அளவிற்கு எப்படி துணிச்சல் வந்தது? அவர்களை வழிநடத்துவது யார்? இதற்கு முன் இவ்வாறான முறைகேட்டின் மூலம் வெற்றி பெற்றுப் பணியில் அமர்ந்தவர்கள் எத்தனை பேர்?
அதனால் தங்கள் சொந்த மண்ணில் பணி வாய்ப்புகளை இழந்து எதிர் காலத்தைத் தொலைத்த தமிழ்நாட்டு இளைஞர்கள் எத்தனை பேர்? இவற்றையெல்லாம் பற்றி விரிவான நேர்மையான விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை விடுவித்துள்ளது வடநாட்டு முறைகேட்டு கும்பலைக் காப்பாற்ற நடைபெறும் மிகப்பெரிய சதிச்செயல்தான் என்று தமிழ்நாட்டுத் தேர்வர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆகவே, நடைபெற்று முடிந்த சுங்கத்துறை பணித்தேர்வினை உடனடியாக ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து விரைந்து மேல் முறையீடு செய்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைப் பெற்றுத் தர வேண்டுமென இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கு நடைபெற்ற பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.