இந்தியாவிலேயே முதன்முறையாக நாட்டின் நாய்களுக்காக நடைபெற்ற பிரத்தியேக கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தேனி கால்நடை மருத்துவக்கல்லூரி சார்பில் “தேசிய அளவிலான நாட்டின நாய்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்” மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.
வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று கண்காட்சியைத் துவக்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சை, காரைக்குடி உள்படத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 270 நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.
கண்காட்சியில் பங்கேற்ற சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி, ராஜபாளையம், கட்டக்கால் உள்ளிட்ட பல்வேறு நாட்டின நாய்களுக்கு ‘குட்டி இளம் பருவம்’ மற்றும் ‘வளர்ந்த நாய்கள்’ எனும் பிரிவுகளில் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பைகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நாய்களுக்குப் பரிசு கேடயங்களும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வக்குமார் அளித்த பேட்டியில்,
“நாட்டின நாய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜபாளையம், சிப்பி பாறை ஆகிய இனங்கள் மட்டுமே தற்போது நாட்டின நாய்களுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளன.கோம்பை,கன்னி ஆகியவற்றுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அயல்நாட்டு இனங்களுக்கு இணையாக நாட்டின நாய்களுக்கும் மோப்ப சக்தி இருப்பது தற்போது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன. பிரதமர், முதலமைச்சர் பாதுகாப்புக் குழு மற்றும் விமான, ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நாட்டின நாய்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம்.
லாப நோக்கத்தில் நாட்டின நாய்களை அணுகக் கூடாது. அவைகளை வளர்ப்பதில் மனிதர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. மன அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களை நாய்கள் கிடைக்கின்றன. எனவே லாப நோக்கத்தில் இல்லாமல் மன மகிழ்வுக்காக நாட்டின நாய்களை வளர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.