நள்ளிரவு குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை, வீட்டின் வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையின் பின்புறம் வெஸ்டோட குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது, இப்பகுதில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் விருந்தினர் மாளிகையில் சிறுத்தை உலா வந்த வண்ணம் உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வந்து வளர்ப்பு நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளை வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில் தமிழகம் விருந்தினர் மாளிகையின் பின்புறம் அமைந்துள்ள வெஸ்ட்டோட குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு வீட்டின் நுழைவு வாயிலில் நுழைந்த சிறுத்தை வீட்டின் இரண்டாவது மாடியில் வெளியில் உறங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக இறங்கி தமிழகம் விருந்தினர் மாளிகை புதருக்குள் சென்று மறைந்தது.
தொடர்ந்து இரவு நேரங்களில் இப்பகுதியில் குடியிருப்புகளின் அருகே சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலதுறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.