அதிமுகவில் இருந்து ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்ட அக்கட்சியின் முன்னால் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் எடுத்த சட்ட ரீதியிலான போராட்டம் அனைத்துமே எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக மாறி ஒட்டு மொத்த அதிமுகவுமே தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.
பாஜகவுடன் தான் கூட்டணி
தற்போது அதிமுக என்றாலே எடப்பாடிதான் என்பது உறுதியான நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் வரை கூட்டணியில் இருந்த பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உருவான வார்த்தைப் போரானது கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியது. வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்கின்றன. இதில், “அதிமுகவை மீட்டெடுப்போம்” என்று கூறி அதற்கென்று தனி குழு அமைத்து செயல்பட்டு வரும் ஓ.பன்னீர் செல்வமோ ஆரம்பம் முதல், “பாஜகவுடன் தான் கூட்டணி” என அவராகவே சொல்லி வந்தார்.
கண்டு கொள்ளப்படாத ஓ.பி.எஸ்..!
ஆனால், பிரதமர் மோடி கடந்த மாதம் தமிழகம் வந்த போது கூட்டணி தலைவர்கள் பலரும் அவருடன் மேடையில் ஏற்றப்பட்ட நிலையில், ஓ.பி.எஸ். மட்டும் மிஸ்ஸிங். காரணம், ஓ.பி.எஸ்.சை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேசி முடித்த பாஜக ஓ.பி.எஸ்.சை அழைக்கவே இல்லை. இதனால், ஓ.பி.எஸ்.சை விட அவரை நம்பி இருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் மன ரீதியாக பலவீனப்பட்டு கிடந்தனர்.
இரட்டை இலையை மீட்டெடுப்போம்!
இதனால், வெறுத்துப் போன ஓ.பி.எஸ்., ‘தான் இன்னும் பலமாகத்தான் இருக்கிறேன்’ என்பதை காட்டுவதற்காக, “இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்” எனக் கூறி வந்தார். இருந்தாலும், முதலில், கட்சியை மீட்டெடுப்போம் என அறைகூவல் விடுத்து வந்த ஓ.பி.எஸ்., தற்போது, கட்சி சின்னத்தை மீட்டெடுபோம் எனக் கூறி வந்ததை யாருமே நம்ப தயாராக இல்லை. இந்நிலையில், தன்னைப் போலவே அதிமுகவை மீட்டெடுப்போம் என்ற ஒத்த கொள்கை கொண்ட சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் இணக்கமாக இருந்த ஓ.பி.எஸ். அவர்களையும் பாஜக ஆதரவாளர்களாகவே மாற்றினார். ஆனால், ஓ.பி.எஸ்.சோடு சேர்த்து அவர்களையுமே பாஜக கண்டு கொள்ளவில்லை. இது ஒரு புறமிருக்க, ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஒவ்வொருவராக பெயர்த்தெடுத்து அதிமுகவில் ஒட்டவைத்து வந்தார் எடப்பாடி.
“வாங்க, உட்கார்ந்து பேசிக்கலாம்”
இதனால், பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நிலை கொள்ளாமல் தவித்த ஓ.பி.எஸ்.சிடம் மறைமுகமாக பேசிய பாஜக, “அண்ணே, நீங்க தாமரை சின்னத்துலே நிக்கிறதா இருந்தா சொல்லுங்க. ஒக்கார்ந்து பேசிக்கலாம்” எனக் கூறியதாகவும் தெரிகிறது. ஆனால், அதற்கு ஒத்துக் கொண்டால், மிச்சமீதி இருக்கும் நிர்வாகிகளும் தொடர்களும் ஒரேயடியாக எடப்பாடி பக்கம் சென்று விடுவார்கள் என்பதை நன்கு அறிந்த ஓ.பி.எஸ். அதற்கு பிடி கொடுக்காமலேயே இருந்தார். ஆனால், அவரது மகனும், சிட்டிங் தேனி மக்களவை எம்.பியுமான ரவீந்திரநாத்தோ, “அது இலையாக இருந்தாலும் சரி; பூவாக இருந்தாலும் சரி, எனக்கு ஓ.கேதான்…” என மறைமுகமாக தாமரை சின்னத்திற்கு ஓ.கே. சொல்லி வந்தார்.
நோ பர்மிசன்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் இருந்து சென்னை வந்த பாஜக மேலிட தலைவர்களான வி.கே. சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் ஓ.பி.எஸ்.சை அழைத்து பேசினர். அதற்கு அடுத்த நாள், ஓ.பி.எஸ். மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரையுமே அழைத்து பேசி கூட்டணியை உறுதி செய்தனர். அப்போதும், தனக்கென சின்னம் இல்லாத ஓ.பி.எஸ்., தனிச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதிலாக தாமரை சின்னத்திலேயே போட்டியிட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு ஓ.பி.எஸ். ஒப்புக்கொள்ளாத நிலையில், கூட்டணி உறுதியானாலும், தொகுதி எண்ணிக்கையும் எந்தெந்த தொகுதிகள் என்பதும் இறுதி செய்யப்படாமலேயே இருந்தன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இன்று (15.03.2024) தமிழகம் வந்துள்ள நிலையில்சின்னம் குறித்து முடிவெடுக்காத ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரை மீட் பன்ன அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இந்நிலையில்தான், “வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுவதில்லை” என அவர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான சிலருடன் பேசினோம் நாம். “வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தை எப்படியும் மீட்டு விட முடியும் என நம்பி இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், தேர்தல் தேதி இன்றோ நாளையோ அறிவிக்கப்படும் நிலையில், இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது. அதே நேரத்தில், தாமரை சின்னத்தில் போட்டியிடவும் அவர் விரும்பவில்லை. தவிர, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற தனது கட்சியையே சரத்குமார் பாஜகவில் இனைத்த்தைப்போல தற்போது தனி அணியாக இருக்கும் ஓ.பி.எஸ்.சும் அது போல இணையலாமே எனவும் பாஜக தரப்பில் இருந்து கூறப்பட்ட ஆலோசனைகளையும் மறுத்து வந்தார் ஓ.பி.எஸ்.
“எக்ஸ் சியெம்மை இப்படியா இன்சல்ட் பன்றது..?”
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், முன்னால் முதல்வராக இருந்த அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ள நிலையில், 3 அல்லது 4 தொகுதிகளை ஒதுக்குகிறோம் என பாஜக தரப்பு முடிவு செய்திருப்பதையும்ம் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவேதான், இந்த தேர்தலில், நிபந்தனை அற்ற ஆதரவை பாஜகவிற்கு அளிப்பது என முடிவெடுத்து விட்டார் ஓ.பி.எஸ். அவர் கூறியது போல, இரட்டை இலை சின்னத்தை மீட்ட பிறகே இனி தேர்தலில் போட்டி என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அதைத்தான், “இரட்டை இலையில்தான் போட்டி” என கடந்த சில தினங்களாகவே கூறி வந்தார் ஓ.பி.எஸ்” என கம்பி கட்டி, சாரி, கூறி முடித்தனர் நம்மிடம்.