குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்த வந்த ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே திரும்பிச் சென்றார்.
குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் வாக்கினை பதிவு செய்துள்ளனர். சென்னையில் முதல் வாக்கினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார்.
காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நாடாளுமன்ற அலுவலகம், மாநில சட்டசபை அலுவலகங்களில் இதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் முர்முவிற்கு NDA(தேசிய ஜனநாயக கூட்டணி) கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இதனால் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முர்மு வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன.
குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவானது; காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். டெல்லி சென்று வாக்களிக்க இயலாத எம்.பிக்கள், மாநிலங்களின் தலைமை செயலகத்தில் வாக்களிப்பர். தமிழக சட்டசபை வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழக தேர்தல் பார்வையாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த புவனேஸ்வர்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்த வந்த ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே திரும்பிச் சென்றார். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு மேல் பி.பி.இ கிட் உடன் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததை அடுத்து, போர் நினைவுச் சின்னம் அருகே திரும்பிச் சென்றார்.