ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வினோத் மீது வெடிபொருள் தடுப்பு சட்டம், பொது சொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில் நேற்று ஆளுநர் மாளிகை 1வது மெயின் கேட் முன்பு வினோத் என்ற நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பேரிகார்ட் பக்கம் பெட்ரோல் குண்டு வீசிய உடனேயே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கருக்கா வினோத்-ஐ தடுத்து உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வினோத்திடம் இருந்து வீசுவதற்கு வைத்து தயார் நிலையில் வைத்து இருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆளுநர் மாளிகை முன் இருந்த பேரிகார்ட் மீது தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்றும் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பதும் தெரியவந்துள்ளது.அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பகவும், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் ஆணையர் பிரேம் குமார் சின்ஹா தெரிவித்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது காவல் துறையினர், வெடிபொருள் தடுப்பு சட்டம், பொது சொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.