வாணியம்பாடியில் இரட்டை பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ள நிலையில், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சையளித்ததால் பெண் உயிரிழந்ததாக கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் மதன் குமார், சங்கரி தம்பதியினர். கூலி தொழிலாளியான மதன் குமார் நிறைமாத கர்ப்பணியான தனது மனைவியை இன்று அதிகாலை 4:30 மணியளவில் இரட்டை பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிரசவ சிகிச்சையின் போது சிறிது நேரத்திலேயே சங்கிரி உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் சங்கரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்று கூடி மகப்பேறு மருத்துவர் இல்லாமல், பணியில் இருந்த செவிலியர்கள் மட்டுமே கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்ததால் தங்கள் பெண் உயிரிழந்ததாக கூறி முற்றுகையிட்டனர்.
பின்னர் சங்கரியின் கணவன் மதன் அளித்த பேட்டியில்,
“காலை பிரசவத்திற்காக தனது மனைவி அனுமதித்த போது பிரசவ அறையில் நுழையும் போதே செவிலியர்கள் ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும், பின்னர் மருத்துவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டே தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் தனது மனைவி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் உயிரிழந்த கர்ப்பிணி சங்கரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.