Adi Jagannath Perumal Temple-ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதி ஜெகநாதர் பெருமாள் ஆலயத்தில் 1கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் பழமைவாய்ந்த ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 44-வது திருத்தலமாக விளங்கி வருகிறது. சேதுபதி மன்னர்களுக்கு பாத்தியப்பட்ட ஆலயம் இது. பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வது உண்டு.
பெருமாளுக்கு உகந்த நாட்கள் மற்றும்விழாக்களில் மூலவர் ஆதி ஜெகநாத பெருமாளுக்கும், அம்பாளுக்கும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். சாதாரண நாட்களில் இந்த நகைகள் பெட்டகத்தில் வைக்கப்பட்டு கோயில் ஸ்தாணிகர் சீனிவாச அய்யங்கார் பொறுப்பில் இருந்துள்ளது.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற பண்ணாரியம்மன் கோவில் திருவிழா..!!
இந்த நிலையில் கடந்த 2வாரங்களுக்கு முன்பாக ஆதி ஜெகநாத பெருமாள் மற்றும் அம்பாளுக்கு அணிவிக்கப்படும் நகைகளை கணக்கெடுத்து உள்ளனர். இதற்காக சீனிவாச அய்யங்காரிடம் இருந்த நகைப்பெட்டகத்தை வாங்கி, கணக்கிட்டுள்ளனர். அப்போது பெட்டகத்தில் வைக்கப்பட்ட நகைகளில், 952கிராம் தங்க நகைகள், 2400 கிராம் வெள்ளிநகைகள் என 1கோடி ரூபாய் மதிப்பிலான பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த நகைகள் காணாமல் போயுள்ளது தெரியவந்தது.
இதையும் படிங்க: Thiruvenkadu-”மாயமான அம்மன் தாலிச் சங்கலி..” திருவேற்காட்டில் நடந்தது என்ன?
இது தொடர்பாக சமஸ்தான தேவஸ்தான திவான் பசுபதி பாண்டியன், ஸ்தானிகர் சீனிவாச அய்யங்காரிடம் விசாரித்துள்ளார்.
அவர் 2 வாரங்களில் இது குறித்து பதில் அளிப்பதாகக் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அவர் குறிப்பிட்ட காலத்தில் பதில் அளிக்காத நிலையில், திவான் பழனிவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஸ்தானிகரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பழமை வாய்ந்த ஆதிபெருமாள் கோயிலில் 1கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமானது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.