தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் போதைப்பொருளை கடத்த முயன்ற 8 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ரூ. 30 கோடி மதிப்புள்ள சரக்குகளை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையும் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி கியூ பிரான்ச் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை, அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.