அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கியதாக சென்னை கெரும்பாக்கத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியாரை இன்று காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் மாணவர்களை சரமாரியாகத் திட்டியுள்ளார்.
படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த அவர், மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது அவர்களைத் தாக்கியும் உள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை ஒருமையில் பேசி சண்டை இழுத்துள்ளார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
நடிகை ரஞ்சனா மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணன் போலீஸில் புகார் அளித்த நிலையில், அந்த புகாரின் அடிப்படையில் காலை மாங்காடு போலீஸார் ரஞ்சனாவை அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர்.
மேலும், அவர் மீது மாணவர்களைத் தாக்கியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
கைது செய்யவந்த காவல்துறையினருடனும் கைது ஆணை இருக்கிறதா? என்ன காரணத்துக்காக கைது செய்கிறீர்கள்? என்றெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் தமிழக பாஜகவிலும் இருக்கிறார்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் நடிகை ரஞ்சனா நாச்சியாரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நீதிமன்றம் சென்றால் ஒரு நொடி கூட நிற்காத வழக்கிற்கு கைது செய்ய திராவிட மாடல் அரசால் மட்டுமே முடியும்.
அவர் மாணவர்களை திட்டியது அடித்தது தவறென்றால் அவர் தடுக்காமல் விட்டு ஏதோ ஒரு மாணவர் கீழே விழுத்து விபத்துக்குள்ளாகி இருந்தால் அந்த நடத்துனரும் அரசும் பொறுப்பேற்குமா? செயலின் நோக்கத்தை பார்க்காது அதை யார் செய்தார் என்கிற பின்புலத்தை வைத்து கைது செய்வது எந்த வகையில் நியாயம் ?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.