காஞ்சிபுரம்(kanchipuram) அருகே உள்ள திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்,காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று மதிய உணவு இடைவேளையில் பள்ளி மாணவர்கள் உணவு அருந்துவதற்காக எடுத்துச் சென்ற தட்டுகளைக் கழுவுவதற்காகக் குடிநீர்த் தொட்டிக்குச் சென்றுள்ளனர்.அப்போது குடிநீர்த் தொட்டியிலிருந்து துர்நாற்றம் அடித்துள்ளது.
இது தொடர்பாக மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளனர். அங்குச் சென்று பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்து சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர்கள் குடிநீர் தொட்டியிலிருந்த குடிநீர் முழுவதையும் வெளியேற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மர்மநபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.