ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் டிடிஎஃப் வாசன், தனது பைக் சவாரிகளின் வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றுகிறார். அதுமட்டுமின்றி பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட், பந்தயம் என வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இவர் மீது சாலை விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் யூடியூபர் டிடிஎப் வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இவர் எதிரே வரும் வாகனங்களுக்கு எதிர்திசையில் அதிவேகமாக பைக்கில் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் இவரது பைக்கின் வேகம் பார்ப்பவர்களைக் கூட பதற்றமடையச் செய்கிறது.
இந்த நிலையில் கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வாசன். இவர் Twin throttlers என்ற யூ-ட்யூப் சேனலை நடத்தி வருகிறார். பைக் சாகசங்கள், ட்ராவ்லாக் வீடியோக்களை தனது சேனலில் பதிவேற்றி வருகிறார்.
வாசனுக்கு 2கே கிட்ஸ் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரை டி.டி.எஃப் வாசன் என்று அழைத்து வருகின்றனர். ஆனால் அண்மை காலமாக அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அருகே, ரசிகர்களை சந்திக்கிறேன் என மிகப்பெரிய கூட்டத்தை அழைத்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் வாசன் அதிக வேகத்துடன் பயணிப்பதால் இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணம் ஆகிவிடும். எனவே, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பலரும் கூறிவந்தனர். அப்போதே காவல்துறை அவரை எச்சரித்து அனுப்பியது. இருப்பினும் வாசன் மாறவில்லை எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து கோவை – பாலக்காடு சாலையில் அசுர வேகத்தில் சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து வாகனத்தை அஜாக்கிரதையாக, மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் இயக்கியதால் வாசன் மீது போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆபத்தான அதிவேகப் பயணத்தின் போது, பின் இருக்கையில் ஜி.பி. முத்து ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் செல்லும் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக வேகத்தில் பயணிப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது.