அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு சீட் கூட வராது என்று பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளது பாஜக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜூலை மாதம் 28 ஆம் தேதி ‘என் மண் , என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்கினார். இந்த நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த நடைபயணமானது திமுக அரசின் ஊழல் குறித்தும் பாஜக 9 ஆண்டுகால சாதனையை மக்களிடம் எடுத்துரைத்து வரும் 2024 ம் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மாவட்டம் முழுவதும் மக்களை சந்தித்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில்,சிவகங்கை, மதுரை மாவட்டங்களைக் கடந்த அண்ணாமலை விருதுநகரில் பாதயாத்திரையில் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை தினமும் 1 கி.மீ தூரம் கூட நடப்பதில்லை என்றும், பிரத்யேக ஏ.சி பேருந்தில்தான் செல்கிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்த்தித்த பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர், அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த கேள்விக்கு “அண்ணாமலை இருக்கும்வரை பாஜகவிற்கு ஒரு சீட் கூட வராது. அதிமுகவின் ஒரு வாக்கு கூட பாஜகவிற்கு வராது.
நடைபயணத்தால் பாஜகவிற்கு நஷ்டம், அண்ணாமலைக்கு பெரிய லாபம்” எனக் கூறியுள்ளார்.மேலும் அதிமுக இருந்தால் தான் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம். நட்பு என்று சொல்லிக்கொண்டே காறித் துப்பினால் எப்படி கூட்டணி சரியாக இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எஸ்.வி.சேகர் பாஜகவில் இருந்து கொண்டு தமிழக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளது பாஜக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுதி உள்ளது.