அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் தமிழ் (tamil language), கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குநர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டில், 10-ஆம் வகுப்பு வரை தமிழ் (tamil language) கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாணவர்கள் பொது தேர்விலும் கட்டாயம் தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டும் என்றும், இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை விரைவில் வடிவமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்காக, அனைத்து தனியார் பள்ளிகளும், தகுதியான ஆசிரியர்களை பணி அமர்த்தி, மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத் தர வேண்டும் என்றும் தமிழ் கட்டாயப் பாட முறையை அனைத்து தனியார் பள்ளிகளும் கடைப்பிடிப்பதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்” என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2015 – 2016 ஆம் ஆண்டில், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமான நிலையில், அதற்கு அடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்ற கல்வி ஆண்டில், 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் அமலான நிலையில், தற்போது 2023 – 2024ஆம் கல்வி ஆண்டில், 9-ம் வகுப்பு வரையிலும், 2024 – 2025-ம் கல்வி ஆண்டில், 10-ம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.