பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது நலமாக உள்ளார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்னர்.
நேற்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
பின்னர், அங்கிருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் இல்லை எனவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய அறிக்கையை தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்டதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மருத்துவமனை அறிக்கையில், “தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 12-ம் தேதி மதியம் மேல் வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டதால் நாராயணா ஹிருத்ராலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதையடுத்து, அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவருக்கு வலி மற்றும் திரவ நிவாரணிகள் சிகிச்சைக்காக கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருடைய உடல்நிலை தற்போது சீராக உள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.