சென்னை கடற்கரை சாலையில் காட்சிபடுத்தப்பட்டுள்ள விடுதலைப் போரில் தமிழகம் என்ற 3 அலங்கார ஊர்திகள் பொதுமக்கள் பார்வைக்கு மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், செய்தித்துறை சார்பில் விடுதலை போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் ,3 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டு களிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 26ஆம் தேதி அன்று அந்த ஊர்திகளை சென்னை தீவுத்திடலில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள், சென்னை மாநகர மக்கள் கண்டு களிக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரை இணைப்பு சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே, பொதுமக்களின் பார்வைக்கு கடந்த 20ஆம் தேதி முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், மற்றும் சுற்றுலா பயணிகளும் இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 21ம் தேதி அன்று இந்த ஊர்திகளை பார்வையிட்டு அங்கு கூடி இருந்த மாணவர் செல்வங்களுடன் கலந்துரையாடினார். சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ,தமிழக முதலமைச்சருக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில், இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.