தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ /மாணவியர்கள் 2024 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி (சனிக்கிழமை ) நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண்.960. கல்வித் (இ2) துறை, நாள்.11.10.91-ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024 -2025 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவராவார்கள்.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும்.
தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கான கட்டணம் ரூ.5/- சேவைக் கட்டணம் ரூ.5/- என மொத்தமாக ரூ.10/-னை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
Also Read : அமெரிக்க செயல்திறன் துறையில் எலன் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பு..!!
தேர்விற்கு விண்ணப்பிக்க 12.11.2024 முதல் 20.11.2024 வரை என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000/- வீதம் வழங்கப்படும்.
குறிப்பு; நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ / மாணவிகள்
விண்ணப்பிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.