தென்காசியில் வேலைக்கு சென்ற வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான நகையை திருடிய பெண் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
தென்காசி சிவந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜவல்லி (வயது 69). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வீட்டில் கடந்த 2019 -ம் ஆண்டு 16 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது. இது குறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது.
இந்நிலையில், பங்கஜவல்லி செல்போனில் அவர் வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமாரரின் மனைவி ஈஸ்வரி தனது வீட்டில் திருட்டு போன தங்கநகையை, கழுத்தில் அணிந்து கொண்டு செல்பி எடுத்து அதனை ஸ்டேடசில் பதிவு செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வி, பெண் போலீசார் தாமரை, மலர்கொடி ஆகியோர், ஈஸ்வரியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியத்தில், தான் அந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து திருட்டுப் போன சுமார் 4½ லட்சம் மதிப்புள்ள தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் ஈஸ்வரி 6 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த நிலையில், திடீரென வேலையில் இருந்து நின்று விட்டார்.
அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போதும் அவர் எடுக்கவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு அவர் வேலையில் இருந்து நின்ற பிறகு சில நாட்கள் கழித்து பார்த்த போது பங்கஜவல்லியின் வீட்டில் இருந்த நகை காணாமல் போனது.
சில நாட்களுக்கு முன்பு ஈஸ்வரி திருடிய நகையை தனது கழுத்தில் அணிந்து கொண்டு ஒரு திருமண வீட்டிற்கு சென்று விட்டு அவரது உருவத்தை செல்போனில் செல்பி எடுத்து அந்தப் படத்தை செல்போன் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். இதனை பார்த்த பங்கஜவல்லி அது தனது நகை என்று தெரியவே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
நகையை திருடி விட்டு மூன்று ஆண்டுகள் கழித்து அந்த நகையை கழுத்தில் அணிந்து ஸ்டேட்டஸில் பதிவு செய்து சிக்கிக்கொண்ட பெண்ணால் தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.