political parties Uncivilized act : வடசென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் மனுத்தாக்கலின் போது திமுக, அதிமுக, பாஜகவினர் நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்ட செயல் அரசியல் கட்சியினரின் செயல்பாடு குறித்து பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியே தொடங்கிய நிலையிலும் பங்குனி உத்திரத் திருநாளான இன்று (திங்கட்கிழமை) அதிமுக கூட்டணிக்கட்சிகளின் 40 வேட்பாளர்களும், திமுக, பாஜக உள்பட மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்யும் நிகழ்வுகளை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பும் செய்து வருகின்றன.
வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி வேட்பாளரே நேரில் வந்து டோக்கன் பெற வேண்டும், வேட்பாளரோடு சேர்ந்து 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடசென்னை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல்ஹாசன் 11 நாள் தேர்தல் பிரசாரம்!!
இதில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு பதிலாக அவரது உதவியாளர் டோக்கன் எண் 2ஐ பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ நேரில் வந்து டோக்கன் எண் 7ஐ பெற்று காத்திருந்துள்ளார்.
அப்போது அங்கு அந்த கலாநிதி வீராசாமி, வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றதால், அதிமுக தரப்பும் மனுத்தாக்கல் செய்யச் சென்றனர்.
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவிதேஜா முன்பாக இரு தரப்பினரும் தாங்கள் தான் முதலில் வந்ததாக தெரிவித்து தங்களது மனுக்களைத் தான் முதலில் ஏற்க வேண்டும் என்று வார்த்தைகளில் மோதிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது.
திமுக அதிமுக என இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டிருந்த காட்சிகள் ஊடகங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, அவற்றை பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நேரம் பாஜக தரப்பினரும், காலதாமதமாவதால் தங்களிடம் முதலில் மனுவை வாங்கிவிட்டு அதிமுக திமுக பஞ்சாயத்தை பிறகு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களும் பிரச்சனையில் ஈடுபட்டனர்.
இப்படி மாநில மற்றும் தேசிய கட்சிகள் ஒரு மனுத்தாக்கலின் போதே தங்கள் ஈகோவுக்காக நீயா, நானா யுத்தம் நடத்திக் கொண்டிருந்ததை நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் முகம் சுழித்துள்ளனர்.
விதிமீறல், சர்ச்சை, தேவையற்ற வாக்குவாதம் என்று அரசியல் கட்சிகளின் அநாகரிகப் போக்கு (political parties Uncivilized act) பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவேட்பு மனுத்தாக்கலின் போதே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனதில்லாமல் இப்படி அடித்துக் கொள்கிறார்களே இதுதான் அரசியல் கட்சிகளின் தலைமைகள் தங்கள் கட்சியினருக்கு கற்றுக் கொடுக்கும் பாடமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க : “இனி, ஆக்ஸிஜன் கொடுக்க முடியாது!” – இரட்டை இலை வழக்கில் ஓ.பி.எஸ்.சுக்கு அதிர்ச்சி!