TTV Dhinakaran : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடி துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 13 பேரின் தியாகங்களுக்கு செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலி,
இக்கொடூரச் சம்பவம் அரங்கேற காரணமாக இருந்த அனைத்து அதிகாரிகளின் மீதும் குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்வதுதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் நினைவு தினம் இன்று.
தமிழ்நாட்டையே கொந்தளிக்கவைத்த துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான காவலர்கள், உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் என அனைவரின் மீதும்,
குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற உயிரிழப்புகளை எதிர்கொண்ட குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு தற்போது வரை நிறைவேறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இந்த கொடிய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் படி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்,
அதே அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்த திமுக அரசின் துரோகம் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
அறவழியில் போராடி துப்பாக்கிச்சூட்டிற்கு பலியான 13 பேரின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில்,
கொடூரச் சம்பவம் அரங்கேற காரணமாக இருந்த அனைத்து அதிகாரிகளின் மீதும் குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்வதே உயிரிழந்த அனைவருக்கும் செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார் TTV Dhinakaran.