இந்திய மக்களின் பிரதான தொழிலாகவும், நாட்டின் முதுகெலும்பாகவும் விவசாயம் உள்ளது.
விவசாயத்திற்காக பல சட்ட திட்டங்களை கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவாக அவரது பிறந்த நாளான டிச.23 ஆண்டுதோறும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இன்று (23.12.23) தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில்,
“இயற்கை பேரிடர், வறட்சி உள்ளிட்ட பல்வேறு விதமான சவாலான சூழலிலும் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவை உற்பத்தி செய்வதை முதன்மை பணியாக கொண்டிருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
விவசாயத்தில் ஏற்படக்கூடிய சிறிய அளவு மாற்றமும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, எக்காலத்திற்கும் உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.