நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கையை , சக வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் , திரை பிரபலங்கள் என பலரும் அவர்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவரது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவன் சின்னதுரை, அவரது சகோதரி மீது, சக மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

பள்ளி மாணவர்களிடையே சாதிய சிந்தனையை தூண்டி அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி பிரச்சனைக்காக நடக்கும் கொடூர தாக்குதல்களை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் நாங்குநேரியில் முன் விரோதம் காரணமாக விவசாயி வானுமாமலை என்பவரின், பெட்டிக்கடைக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் தீ வைத்து சேதப்படுத்தியதுடன், 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றது. கலவர பூமியாக மாறியுள்ள நாங்குநேரியில், பதற்றத்தை தணிக்கவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது