விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பாமக-வை சேர்ந்த வழக்கறிஞர் பாலுவிடம் நிருபர்கள் சரமாரி கேள்வியெழுப்பியபோது அவர் மழுப்பலாக பதில் சொன்ன விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி என்னும் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் திருவிழாவின்போது பட்டியலின மக்களை உள்ளே வழிபட ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த 08.04.2023 அன்று அந்த கோவிலுக்கு ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் வழிபட உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஒரு சமூக பிரிவினரால் அவர் தாக்கப்பட்டார்.
இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கோவிலுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பாமக-வை சேர்ந்த வழக்கறிஞர் பாலு, பேசினார்.
அப்போது பேசிய அவர், ”இந்த கோவில் எப்படி காலம் காலமாக வழிபட்டு வந்ததோ அதே நடைமுறை தொடரவேண்டும்; அதற்கு உச்சநீதிமன்றம் வரை சென்றாலும் சட்ட ரீதியாக போராடி உங்களுக்கான வழிபாட்டு உரிமையை பெற்று தருவோம்; இந்த வழக்கிற்கு ஆகும் செலவை நாங்களே பார்த்துக்கொள்வோம் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் எப்போதும் இந்த சமூகத்திற்கு அரணாக இருப்பேன் என சொல்லியனுப்பியிருக்கிறார்” என்று வழக்கறிஞர் பாலு பேசினார்.
இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ஒரு சட்டம் படித்தவனை போல பேசாமல், இத்தகைய அறிவீனர்கள் ஓபிசி சமூகத்தை தவறாக வழிநடத்துவதாக விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சு தொடர்பாக விளக்கமளித்து வழக்கறிஞர் பாலு பேட்டியளித்தார். அதில், திருமாவளவன் அநாகரிகமாக ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். உன் சாதி புத்தி என கூறி அந்த சமூக மக்களை இழிவுப்படுத்தியிருக்கிறார் என பேசினார்.
அதனை தொடர்ந்து நிருபர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.அதில்; ஒரு சமூகத்தினரிடம் நீங்கள் பேசிய வீடியோ உண்மையெனில், தொன்று தொட்டு ஒரு வழிமுறை என்றால், அது தலித் மக்களை விடக்கூடாது என்ற வழிமுறையா?ஒரு சமூக மக்களுக்கு சட்ட உதவி செய்ய தயார் என சொல்றீங்க..
அப்படியென்றால் தலித் மக்களை கோவிலுக்குள் விடக்கூடாது என்பதை நீங்கள் ஆதரிப்பதாகதானே அர்த்தம்.. என்று நிருபர் கேள்விகளை அடுக்க; திடீரென டென்ஷனான வழக்கறிஞர் பாலு; நீங்கள் எந்த தொலைக்காட்சி என வழக்கமாக பாஜக தலைவர்கள் செய்யும் பாணியை கையாண்டார். மேலும் நீங்க பேட்டி கொடுக்க வந்தீங்களா? நான் வந்தேனா? நீங்களே பேசுறீங்க என கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திசைதிருப்பினார்.
உடனே சுதாரித்துக்கொண்ட நிருபர்; தான் வேலை செய்யும் தொலைக்காட்சியை கூறிவிட்டு மீண்டும் கேள்விகளை அடுக்கினார். நீங்கள் பேசியதிலிருந்துதானே நான் கேள்வி கேட்கிறேன்… நீங்கள் அதற்கு தொடர்பில்லாத பதிலை சொன்னால் என்ன அர்த்தம் என நிருபர் வினவினார்.
நீங்கள் தலித்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்பதை ஆதரிக்கிறீர்களா? இல்லையா? இதில் பாமகவின் நிலைப்பாடு என்ன?
அதற்கு பதிலளித்த பாலு; இந்து மதத்தின் நம்பிக்கை மீது தெய்வ வழிப்பாட்டின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் நம்பிக்கையை யாரும் குலைக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவம் இருக்கிறது. அதே நேரத்தில், கோவிலுக்குள் வழிபடவேண்டும் என நோக்கம் கொண்டவர்கள் உள்ளே சென்றால் அவர்களை தடுக்கக்கூடாது என்பதை தான் நான் சொல்கிறேன்.
ஆனால் அந்த கோவிலுக்குள் அனுமதிப்பது குறித்து அந்த கோவிலை நிர்வகிக்கும் மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும் என பாமக பாலு பூசி மொலுகியபோது; அது தான் சார் தவறு (Discrimanation), பாகுபாடுன்னு சொல்றாங்க என்றார் நிருபர்.
மேலும், இன்னொரு நிருபர்; நீங்கள் தலித் மக்களை அனுமதிக்க வேண்டும் என்கிறீர்கள்.. அதே நேரத்தில் கோவிலுக்குள் வழிபடுவது தொன்று தொட்டு வரும் வழிமுறை என்கிறீர்கள் இதில் எது உண்மை? கேட்டார்.
கடவுள் பொதுவானவர் என்று சொல்லும்போது தலித் மக்கள் உள்ளே போவதில் என்ன பிரச்சனை? என்று மற்றுமொரு நிருபர் பளீச் என கேட்டார்.
தலித் மக்கள் இந்துக்களா இல்லையா? அப்படி இந்துக்கள் என்றால் அவர்களை கோவிலுக்குள் அழைத்து சென்று வழிபட பாமக நடவடிக்கை எடுக்குமா? இல்லை சட்ட நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வியெழுப்பினார்.
இப்படி பல்வேறு கேள்விகளை நிருபர்கள் அடுக்கியபோதும், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கேள்விகளுக்கு சற்றும் தொடர்பின்றி திரௌபதியின் இந்து மத புராணக்கதையை சொல்ல தொடங்கினார்.மேலும், திருமாவளவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.