விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் வியூக பொறுப்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்திலும், இந்தியா முழுவதும் சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற தேர்தல்களிலும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் மயமாகி வருவதால், இதுபோன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி வருகின்றன.
பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில் கனுகோலு ஆகியோர் தங்களது நிறுவனங்களின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை அரசியல் கட்சிகளிடம் பெற்று அவர்களுக்கான தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : “பாசிசத்தை வீழ்த்திட வேண்டும்”* – ஸ்டாலினின் அந்த கடிதம் யாருக்கு தெரியுமா?
தமிழகத்திலும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இரு பெரும் திராவிட கட்சிகளும் கூட பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனி கனுகோலை தங்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர்.
இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம் காரணம் என்று பரவலாகப் பேசப்பட்டது.
தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் கட்சிகளின் சார்பாக, இவர்கள் தேர்தல் வியூகங்களை அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக சமீபத்தில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டினை ஒருங்கிணைத்தவர் இந்த ஆதவ் அர்ஜுனா தான்.
அந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட விசிகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்காகன இணையதளத்தை வடிவமைத்தவரும் இவர் தான்.
வாய்ஸ் ஆப் காமன் மேன் என்னும் நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜுனாவை இதற்காக மேடையில் வைத்தே திருமாவளவன் பாராட்டிய நிகழ்வும், அதே மேடையிலேயே ஆன்லைன் மூலம் விசிகவில் ஆதவ் அர்ஜுனா தன்னை இணைத்துக் கொண்ட நிகழ்வும் அரங்கேறியது.
![Aadhav Arjuna](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-19-at-4.03.01-PM-2.jpeg?resize=800%2C401&ssl=1)
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவரான ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தது பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் தான் மற்றொரு அதிரடியாக,
விடுதலை சிறுத்தைகளின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு (Aadhav Arjuna) துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள் இந்தப் பதவியை எதிர்பார்த்து காத்துக் கிடக்க, புதிதாகச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு அளிக்கப்பட்ட பதவியால் கட்சிக்குள்ளும் சலசலப்பு கிளம்பியது.
அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற தேர்தலில் ஆதவ் அர்ஜுனாவை வேட்பாளர் ஆக்குவதற்காக, திமுக கூட்டணியில் 2 தனித் தொகுதியும் ஒரு பொதுத்தொகுதியும் கேட்டு விசிக மல்லுக்கட்டியது பரபரப்பானது.
ஆதவ் அர்ஜுனா விசிகவுக்கு பெருமளவு நிதி அளித்திருப்பதாகவும், அதனால் தான் அவருக்காக திருமாவளவன் இப்படி மெனக்கெடுவதாகவும் அரசியல் அரங்கில் பேச்சலைகள் எழுந்தது.
ஆனாலும், திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தனித்தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டதால் என்ன செய்யப் போகிறார் ஆதவ் அர்ஜுனா என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தான், அவரை தேர்தல் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் திருமாவளவன்.
ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்களை ஒருங்கிணைத்தது, விசிக விருது வழங்கும் விழா மற்றும் மாநாடை நடத்திக் காட்டியது என கட்சிக்குள் பெயர் பெற்ற ஆதவ் அர்ஜுனா,
சிதம்பரம் விழுப்புரம் தொகுதிகளில் மீண்டும் விசிகவின் வெற்றிக்கு என்ன செய்யக் காத்திருக்கிறார் என்று விசிகவினர் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சியினரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.