மதுரையில் சர்வதேச சிறுதானிய ஆண்டினை கொண்டாடும் வகையில் சிறுதானிய கண்காட்சி நடைபெற்றது.
மதுரை சர்வதேச சிறுதானிய ஆண்டினை கொண்டாடும் வகையில் மதுரையில் இன்று சிறுதானிய கண்காட்சி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்களை அறிமுகம் மற்றும் சிறுதானிய முக்கியத்துவம் குறித்த புத்தகத்தை வெளியிட்டு விழா மதுரையில் இன்று நடைபெற்றது.
துமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், வேளாண்மை மற்றும் உழவர் பெருமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில், சிறந்த தீர்வு வழங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம் குறித்த புத்தகமும் வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய அமைச்சர், தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் தொழில் வளர்ச்சியை கொண்டு வரும் வகையில், MSME துறையால் செயல்படுத்தப்படும் 3 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூபாய் 683 கோடி மானியத்துடன் ரூபாய் 2 ஆயிரத்து 756 கோடி வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டு 19 ஆயிரத்து 332 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும், பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் திட்டம் (PM-FME) என்ற உணவு பதப்படுத்தும் குறுந்தொழிலுக்கான திட்டத்தின் கீழ் 3,073 உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு ரூபாய் 67 கோடியே 19 லட்சம் மானியத்துடன் ரூபாய் 225 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதற்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வருகிறது என்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்திடவும், அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடவும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், சிறுதானியங்களை விளைவிக்க வேளாண் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவ்வாறு விளைவிக்கப்படும் சிறு தானியங்களை மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களாக மாற்றவும், உணவாக பதப்படுத்தவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சிறுதானிய கண்காட்சியில் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வாங்குபவர் – விற்பவர், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்களுக்கு இடையே சந்திப்புகளும். சிறுதானிய நன்மைகள் குறித்த கருத்தரங்கமும், மகளிர் சுய உதவி குழுக்களிடையேயான போட்டிகளும், சிறு தானிய உணவு செய்முறை விளக்கங்களும் நடத்தப்பட்டது
விழாவில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அரசு செயலர் அருணீராய், வேளாண்மை துறை அரசு செயலர் சமயமூர்த்தி, தொழில் ஆணையர்
சிஜிதாமஸ் வைத்யன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அலுவுலர்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.