கோயம்பேட்டில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதாகும் சுகந்தி, சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சுகந்தி, போலீஸ் துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
சுகந்தி கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் தனது தம்பி சுப்புராயனுடன் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த சுகந்தி, சமையல் அறையில் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் சுகந்தி, தனது காதலனுடன் வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட தகராறில், தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த விஷ்ணு என்பவருடன் சுகந்திக்கு பழக்கம் இருந்துள்ளது. ஆனால், விஷ்ணுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் இவர்களின் இந்த காதல் விவகாரம் விஷ்ணுவின் மனைவிக்கு தெரிய வந்த நிலையில், போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று சுகந்தியிடம் தகராறு செய்துள்ளார். இந்த விவகாரம் உயர் அதிகாரிகள் வரை சென்ற நிலையில், இருவர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சுகந்தி, சென்னை தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்துக்கும், விஷ்ணு அவினாசி போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர்.
ஆனாலும், இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது சுகந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விஷ்ணுவை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர், திருமணம் ஆகி முதல் மனைவி இருக்கும் போது உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார்.
இதனால், கடந்த சில நாட்களாக விஷ்ணு சுகந்தியிடம் பேசவில்லை என தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சுகந்தி, நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வீடியோ காலில் பேசியபடியே விஷ்ணுவிடம் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறினார். ஆனால், அதை நம்பாமல் விஷ்ணு அழைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால், விஷ்ணுவின் நண்பரான மற்றொரு போலீஸ்காரரை தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு சுகந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
அதையடுத்து, சுகந்தியின் காதலனான போலீஸ்காரர் விஷ்ணு மற்றும் அவருடைய நண்பரான மற்றொரு போலீஸ்காரர் ஆகியோரிடம் விசாரணை நடத்த கோயம்பேடு போலீசார் முடிவு செய்து உள்ளனர். அந்த விசாரணைக்கு பிறகுதான் சுகந்தியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.