நீலகிரி மாவட்டம் உதகை வட்டத்தில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் (TNCM Fund) அவர்களுக்கு நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான பணி நடைபெற்ற பொது திடீரென அங்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது .
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த மண் சரிவில் 10கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இதையடுத்து மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கியது .
ஆனால் இந்த மண் சரிவில் சிக்கி 6 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . இதையடுத்து மேலும் சில தொழிலாளர்கள் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று (7.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில்
17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் திருமதி.ராதா (வயது 38), திருமதி.பாக்கியம் (வயது 36),
திருமதி.முத்துலட்சமி (வயது 36), திருமதி.உமா (வயது 35) திருமதி.சங்கீதா (வயது 30) மற்றும் திருமதி.சகிலா (வயது 30) ஆகிய ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திருமதி.ஜெயந்தி (வயது 56), திருமதி.சாந்தி (வயது 45),
திரு தாமஸ் (வயது 24) மற்றும் திரு.மகேஷ் (வயது 23) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
Also Read : https://itamiltv.com/ex-lover-arrested-for-stopping-womans-marriage/
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு (TNCM Fund) தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.