ஊராட்சி டு பேரூராட்சி : ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டு திமுக அரசு முடிவெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாவது..
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் டிசம்பர் 2024-ல் முடிவடைய உள்ளதால் அதற்குப் பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பதற்காக,
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உதவி இயக்குநர் மூலம் கருத்துரு அனுப்புமாறு அரசு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் அவ்வூராட்சியில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையிலும், தேவைகளின் அடிப்படையிலும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்கிறது.
அதன்படி, சி.எப்.சி. மத்திய நிதி கமிஷன் நிதி (இது பேரூராட்சி/நகராட்சிகளுக்குக் கிடையாது). 100 நாள் வேலை திட்ட நிதி இரண்டு விதமாக செலவிடப்படுகிறது.
கிராமப்புற மகளிருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு அளித்து சம்பளம் வழங்குவது; இத்திட்டத்தின் கீழ் ஊரணி அமைத்தல்/தூர் வாருதல், கான்கிரீட் சாலை அமைத்தல் போன்ற பணிகளை மத்திய அரசு நிதியில் இருந்து மேற்கொள்ளுதல்.
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில் கிராமப்புற மக்களுக்கு சொந்த வீடு கட்ட நிதியுதவி – (பேரூராட்சி/ நகராட்சிகளுக்குக் கிடையாது)
தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்துடன் கழிப்பிடம் திட்டம்
பாரதப் பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் – இத்திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மத்திய நிதியில் கிராம சாலைகள் அமைத்தல். ஒருசில மலை கிராமங்களுக்கு 8 கி.மீ. தூரம் வரை சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மாநில அரசு நிதியில் இது சாத்தியமில்லை. நபார்டு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்காக பல திட்டங்கள் மத்திய அரசின் நிதி இல்லாமல், மாநில அரசின் நிதியில் நகரப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது.
எனவே, தற்போதுள்ள ஊராட்சிகளையோ அல்லது ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதிகளையோ, நகரப் பகுதிகளுடன் இணைப்பதால் மத்திய அரசு, ஊராட்சிகளுக்கு நேரடியாக வழங்கும் நிதி நின்றுபோவதுடன்,
புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளின், நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயரும்; வீட்டுவரி மற்றும் சொத்துவரி பல மடங்கு உயரும்;
புதிய வீடு கட்ட அனுமதி பெறுவதற்கான செலவு அதிகரிக்கும் என்று, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிக பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1745080552867172562?s=20
மாநிலங்களிடமிருந்து பெறப்படும் வரி வருவாய்தான் மீண்டும் மத்திய அரசு நிதியாக அந்தந்த மாநிலங்களில் உள்ள ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் இதுபோன்று ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதற்கு முன்பு (ஊராட்சி டு பேரூராட்சி) அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி,
அவர்களின் சம்மதத்தைப் பெற்று இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.