சென்னை : கொரட்டூரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மாநகர பேருந்து (தடம் எண் 70) கோயம்பேடு பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
அந்த பேருந்தை டிரைவர் சிவானந்தம் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் கீழே இறங்கியதும், முன்னால் நின்றுகொண்டிருந்த மற்றொரு மாநகர பேருந்தை எடுத்து வழிவிடுமாறு டிரைவர் சிவானந்தம் கூறி உள்ளார்.
ஆனால், முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த மாநகர பேருந்தின் டிரைவர் புண்ணிய மூர்த்தி, பேருந்தை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 2024 February 6 : இன்றைய ராசி பலன்!!
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த டிரைவர் சிவானந்தம், எதுவாக இருந்தாலும் பேருந்துக்குள் வந்து பேசும்படி கூறி உள்ளார்.
அவர் கூறியதை கேட்டு ஆத்திரமடைந்த புண்ணியமூர்த்தியும், அந்த பேருந்தின் கண்டக்டர் பாலகுமார் இருவரும் பேருந்திற்குள் ஏறியவுடன் சிவானந்தம் பேருந்தின் தானியங்கி கதவை மூடிவிட்டு அங்கிருந்து பேருந்தை எடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சிஅடைந்த புண்ணியமூர்த்தி, பாலகுமார் இருவரும் பேருந்தை நிறுத்தும்படி கூறி உள்ளனர்.
ஆனால், அதை கேட்காமல் சிவானந்தம் தொடர்ந்து பேருந்தை இயக்கி உள்ளார். இதனால் டிரைவர்கள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், புண்ணியமூர்த்தி பேருந்தில் இருந்த கியர் ராடை பிடித்து இழுத்து பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார்.
ஆனால், சிவானந்தம் விடாப்பிடியாக பேருந்தை நிறுத்த மறுத்ததால், மேலும் ஆத்திரமடைந்த டிரைவர் புண்ணியமூர்த்தி மற்றும் கண்டக்டர் பாலகுமார் இருவரும் சேர்ந்து டிரைவர் சிவானந்தத்தை சரமாரியாக அடித்து தாக்கினர்.
அப்போது கண்டக்டர் பாலகுமார், பேருந்தின் கம்பியை பிடித்து தொங்கியபடி டிரைவர் சிவானந்தத்தை காலால் எட்டி உதைத்தார்.
மாநகர பேருந்திற்குள் பயணிகள் கண் முன்பே டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் ஆகியோர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் ஒருவழியாக அவர்களுக்குள் மோதல் முடிவுக்கு வந்த நிலையில், பேருந்தின் தானியங்கி கதவை திறந்து டிரைவர் புண்ணியமூர்த்தி, கண்டக்டர் பாலகுமார் இருவரும் கீழே இறங்கிச் சென்றனர்.
இந்த சம்பவம் நடந்த போது மாநகர பேருந்தில் இருந்த கண்டக்டர் கண்டக்டர் தனது செல்போனில் அதனை வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து (சென்னை) போக்குவரத்து துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.