உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மரத்தில் பக்தர்கள் வேப்பமர பல்லி-யை பார்த்துவிட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என வெகுவாக நம்புகின்றனர்.
இந்து மதத்தில் ஆன்மிகத்துக்கும், பல்லிக்கும் தொடர்பு இருப்பதாக பல்லியை தெய்வமாக பக்தர்கள் வழிபட்டு வரும் வழக்கம் உள்ளது.
அந்த வகையில், வீடுகளில் பல்லிகள் இருந்தால் அதிர்ஷ்டம் என்றும், பூஜை அறைகளில் பல்லிகள் தென்பட்டால் அந்த வீட்டில் செல்வ செழிப்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.
இதையும் படிங்க : தை அமாவாசை 2024 : யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.. நேரம்?
பல்லி மகாலட்சுமியின் அம்சம் என்றும், பூஜை அறையில் வெள்ளியில் பல்லி செய்து வைத்தும் வணங்குவார்கள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தங்க பல்லி இருப்பதை பலரும் அறிந்த ஒன்று. இதே போல காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு பெருமாள் கோயிலில் தங்க பல்லி உள்ளது. இதனை தொட்டு தரிசனம் செய்து விட்டு வந்தால் மங்கள நிகழ்வுகள் நிகழும் என்பது நம்பிக்கை.
பூஜை அறையில் மூன்று பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் மங்களகரமானது என்றும், நல்ல செய்திகள் தேடி வரும், சுப காரியம் கைகூடி வரும் என்றும் கூறுவர் .இவ்வாறு இந்து மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து உள்ளது பல்லி.
அந்த வரிசையில் இப்போது உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர தொடங்கி உள்ளது அங்குள்ள வேப்பமர பல்லி.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கருவூரார் சன்னதியை சுற்றி வலம் வரும் பக்தர்கள், சன்னதியின் பின்புறம் அமைந்துள்ள வேப்பமரத்தில், பல்லி இருக்கிறதா? என மேல்நோக்கி பார்த்தபடி அங்கேயே நின்று விடுகின்றனர்.
அப்போது அந்த வேப்பமரத்தில் பல்லியை பார்த்துவிட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் அந்த வேப்பமரத்தில் உள்ள பல்லியை பார்க்க பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஒருவர் மரத்தில் பல்லியை தேடுவதை பார்த்து பக்தர்கள் கூட்டமாக மாறி விடுகின்றனர்.
இவர்களை பார்த்து தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலா வரும் பயணிகளும் அவர்களுடன் இணைந்து, வேப்பமர பல்லி-யை பார்த்திட ஆர்வம் காட்டுகின்றனர்.
வேப்பமரத்தில் கருவூரார் பல்லியாக காட்சி அளிப்பதாகவும், பக்தர்கள் கூறுகின்றனர். மரத்தில் இருக்கும் பள்ளிகள் மரப்பட்டையின் நிறத்திலேயே இருப்பதால் நீண்ட நேரமாக நின்று பல்லியை தேடுகின்றனர் பக்தர்கள்.
ஆனால், வெகுநேரம் காத்திருந்தாலும் மரத்தில் பல்லி தென்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் ஒரு சிலர்.