மதுரை இரயில் நிலையத்தில் சுற்றுலா இரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆக்ஸ்ட் 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.
இந்த நிலையில் அதிகாலை மதுரை ரயில் நிலையம் அருகே போடி லேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டிக்குள் எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் பத்து பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மதுரை இரயில் நிலையத்தில் சுற்றுலா இரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா இரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை இரயில் நிலையத்தில் இன்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று உரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்த வர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்களை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.