ஒடிசாவில் விபத்துக்கள்ளான ரயில் பயணித்தவர்களின் உண்மை விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாகவும், முறையாகவும் அறிவிக்காமல் முன்னுக்குபின் முறணாக வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 128 வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது துயிலிடத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், வளர்மதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதை மாநிலம் என்று சொல்லும் அளவிற்கு போதை வஸ்துகள் சர்வ சாதாரணமாக கொண்டு வரப்படுகிறது.
அரசு டாஸ்மாக் கடைகளில் குடித்தவர்களே மரணமடைந்து வருகின்றனர். டாஸ்மாக் கடை மீது அச்சம் தரும் அளவிற்கு நிலமை உள்ளது.
மதுபானங்களில் கலப்படம், கள்ளச்சாராய சாவு இதற்கெல்லாம் முழுக்க முழுக்க விடியாத அரசு பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற நிலை இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது.
இது ஒரு புரியாத புதிராக இருக்கிறது. இது போன்ற குற்றச்சாட்டு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசினுடைய கடமை.
ஒடிசா ரயில் விபத்து ஒரு துயரமான சம்பவம் இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்ய சிபிஐக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் குழு சென்றது. ஆனால் சம்பவ இடத்திற்கே போகவில்லை. பிரதமர் வருகையை காரணம் காட்டி விடவில்லை என்பதெல்லாம் முதலமைச்சரின் மகன் ஒரு காரணமாக கூறலாமா? இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுற்றுலா சென்று வந்தது போல சென்று வந்துள்ளனர்.
ஒரு துயர சம்பவத்திற்கு செல்லும்போது கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு ஷூட்டிங் போவது போல சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் பட்டியல் தெரிந்து விட்டது. அதை வைத்து கணக்கு சொல்கிறீர்கள். 150 உடல்கள் அடையாளப்படுத்த முடியாமேல் உள்ளது. விசாரித்து ஒட்டுமொத்தமாக அறிக்கை தர வேண்டும்.
ஆனால் முந்திரிக்கொட்டை போல இன்னும் ஐந்து பேர் நிலை என்ன என்று தெரியவில்லை ஆனால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு சார்பில் முழுமையான அறிக்கை தர வேண்டும்.
எத்தனை பேர் பயணித்தனர்? எத்தனை பேர் முன்பதிவு இல்லாமல் பயணித்தனர்? எத்தனை பேர் மருத்துவமனையில் உள்ளனர்? எத்தனை பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் பெற்றனர்? அவர்களது நிலவரம் என்ன? என்பது குறித்து முழுமையான அறிக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இந்த ஆய்வு கூலிங் கிளாஸ் ஃபேமிலி போயிட்டு வந்தது போல தான் உள்ளது. கூலிங் கிளாஸ் போடலாம் தவறில்லை அவங்க தாத்தாவும் போட்டு இருக்காரு முதலமைச்சரும் போட்டு இருக்காரு.
இந்த அரசு தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு எதையும் நிறைவேற்ற வில்லை இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வேன் என்றார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது ஏன் விடுதலை செய்யவில்லை. இஸ்லாமியர் மக்கள் புறக்கணிக்கப்படுவது தான் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆளுநரை பொறுத்தவரை வேந்தர் என்ற அடிப்படையில் துணை வேந்தர்களை கூட்டத்திற்கு அழைத்துள்ளார். அது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சரின் கூற்றை நாம் பார்க்க வேண்டும். துணைவேந்தர்கள் எதிர்காலத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு எல்லாம் பின்னாடி இருக்கு என ஒரு அமைச்சர் துணைவேந்தரை மிரட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத. கண்டனத்திற்குரியது.
மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. ஏற்கனவே மின்கட்டணத்தை உயர்த்தி கடும் சுமைக்கு ஆளாகியுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்துவது இருக்க கூடாது.
இந்திய வரலாற்றிலேயே வருமானவரித்துறை 8 நாட்கள் சோதனை செய்த வரலாறே கிடையாது. சக அமைச்சர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்குள்ளேயே இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர். செந்தில் பாலாஜி அதற்கு அடுத்து இன்னும் பல அமைச்சர்கள் பட்டியலில் தொடர்வார்கள்”, என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையால் மற்ற அனைத்து அமைச்சர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்ச்சித்துள்ளார்.
பின்னர் பேட்டியளித்த அவை தலைவர் தமிழ்மகன் உசேன், இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை உணர்ந்து அவர்களுக்கான திட்டங்களை அளித்தது அதிமுக தான் என்றார்.