நாளை மறுநாள் (29.06.23) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் (goats) விற்பனை சூடு பிடித்துள்ளது.
சென்னையில் புளியந்தோப்பு, ஆடு தொட்டி, ரெட்டேரி சந்தை, தாம்பரம் சந்தை ஆகிய இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத்தையொட்டி ஆடுகள் (goats) விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
அதேபோல, இந்த ஆண்டும் பக்ரீத் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதியில் இருந்தே ஆடுகள் விற்பனை சென்னை சந்தைகளில் சூடு பிடித்துள்ளது.
இதற்காக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து 70,000க்கும் அதிகமான ஆடுகள் சென்னை சந்தைக்கு விற்பனைக்காக வந்துள்ளன.

மேலும், மேற்குறிப்பிட்ட சந்தைகளில் நாளை வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்நிலையில், இதுவரை ரூ.14 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக, ரெட்டேரி சந்தையில் மட்டும் ரூ.5 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது எனவும், ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
மேலும், இது போன்ற பண்டிகை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஆடுகளை கொண்டு வரும் போது போலீசார் பண வசூலில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு, சந்தைக்கு ஆடுகள் வந்து சேரும் வரை போலீசாருக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.