BJP candidate Madhavi Latha : பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா வாக்காளர்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வாக்கு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.
இன்று நான்காம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இதில், ஐதராபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கே. மாதவி லதா போட்டியிடுகிறார்.
இதேபோன்று, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் சார்பில் அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் அவர்களின் புர்காவை நீக்கி முகங்களை காட்டும்படி மாதவி லதா கூறியுள்ளார்.
அப்போது அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் முகங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ வெளிவந்து சர்ச்சைக்குள்ளான நிலையில், நான் என் கடமையை தான் செய்தேன் என்றும், இது பெரிதாக சர்ச்சையை ஏற்படுத்தும் அளவிற்கு விஷயம் அல்ல என்றும் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோவில் இருப்பதாவது.. வாக்கு மையத்திற்கு வந்த பெண் வாக்காளர்களிடம் உங்களுடைய புர்காவை நீக்கி விட்டு, முகங்களை காட்டுங்கள் என மாதவி லதா (BJP candidate Madhavi Latha) கேட்கிறார்.
தொடர்ந்து ஒவ்வொரு வாக்காளர்களையும் முழு அளவில் ஆய்வு செய்த பின்னரே வாக்கு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடமும் கூறுகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக, மலக்பேட்டை காவல் நிலையத்தில் 171சி, 186, 505(1)(சி) ஆகிய பிரிவுகளின் கீழ் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 132-வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனை ஐதராபாத் கலெக்டர் அவருடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும், மாதவி லதா அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வது போல செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய தனுஷ்..