இந்திய விண்வெளி ஆராய்ச்சியினுடைய புதிய மைல் கல்லாக சந்திராயன் – 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
நிலவு குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்த சந்திராயன் – 3 மிஷன் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது வெற்றிகரமாக சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியுள்ளது.
நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் பகுதியை தேர்வு செய்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கி விண்வெளி துறையில் சாதனை படைத்துள்ளது.
நிலவைப் பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, முன்னணியில் உள்ளது இந்தியா. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியா நிலவிற்கு அனுப்பிய சந்திரயான்-1 விண்கலம், நிலவின் மேற்பகுதியில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆக.கடந்த 5ஆம் தேதி புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது.
பின்னர், ஆக.16 ஆம் தேதி இறுதி சுற்றுவட்டப் பாதையில் உயரம் வெற்றிக்கரமாக குறைக்கப்பட்டு நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவில் விண்கலம் பயணித்தது.
ஆக.17 ஆம் தேதி பெங்களூருவில் இஸ்ரோ மையத்தில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டரை பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், சரியாக மதியம் 1.15 மணிக்கு உந்து சக்தி கலனில் இருந்து பிரிந்தது விக்ரம் லேண்டர்.
தொடர்ந்து, ஆக.18-ஆம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது. அதன் பின்னர், 2வது முறையாக ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.
அதையடுத்து இன்று (23.08.23) சரியாக மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.மேலும், இந்த நிகழ்வை மாலை 5.20 முதல் இஸ்ரோ நேரலை செய்தது.
இதன்மூலம் விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது. மேலும், அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்த சாதனையை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவாகி உள்ளது.
ஆனாலும், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.