நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சார்பில் இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த லியோ திரைப்படத்தில் எனக்கும் த்ரிஷாவுக்கும் பாலியல் தொந்தரவு செய்யும் காட்சியே இல்லை என நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.
மேலும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர். இனி எனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைத்து உள்ளது.
இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் இச்சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.அதில் நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும்.
எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது . இப்பவும் சொல்கிறேன் நடிகை த்ரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை.
த்ரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும் .
மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்; தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது எரிமலை குமுறினால் எல்லோரும் ஓடிப்போய் விடுவீர்கள் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
நடிகர் மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் சக நடிகை பற்றி பேசியிருக்கிறார். அவர் அதற்கு மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல்.
மன்னிப்பு| கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல். கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கோடோ, அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.