அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகளில் எந்த உள் நோக்கமும் இல்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை கூடல் புதூர் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி:
அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே அவர்களின் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனையில் திமுக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய அமைச்சர்,
லஞ்ச ஒழிப்பு துறை கடந்த வாரம் பத்திர பதிவு துறையில் கூட சோதனை நடத்தி உள்ளதாக தெரிவித்தார்.எனவே முன்னாள் அமைச்சர்கள், வீடுகளில் நடைபெறும் சோதனையில் எந்த உள் நோக்கமும் கிடையாது என்றும், இது சட்ட நடவடிக்கை; இதை அரசியலாக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மாரிதாஸ் விவகாரத்தில் தேவைப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் எனவும், திமுக மாவட்ட செயலாளர்கள் வசம் காவல்துறை உள்ளதாக அண்ணாமலை சொல்வது தவறு என்று குறிப்பிட்ட அமைச்சர், யார் தவறு செய்தாலும் காவல்துறை தண்டிக்கும் எனவும், திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.