சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு (dmk youth wing Meeting) நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகிறார்.
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது.
இதனை கனிமொழி மாநாடு பந்தல் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை தொடக்கி வைக்க உள்ளார்.
மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறுகிறது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்றவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக மாநாடு நடைபெறும் பந்தலானது 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 1.45 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கவும், 2.5 லட்சம் பேர் மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடைகிறார்.
சேலம் விமான நிலையம், ஓமலூர், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் வரை 65 கிலோமீட்டர் முதல்வருக்கு திமுகவினர் வரவேற்பளிக்க உள்ளனர்.
பின்னர் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிடும் முதல்வர்,சென்னையிலிருந்து கொண்டுவரப்படும் சுடரொளியைப் பெற்று, அதை மாநாட்டுத் திடலில் ஏற்றிவைக்கிறார்.
சென்னையில் தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக நாளை மாலை இளைஞர் அணி மாநாடு திடல் வந்தடைய உள்ளது.
இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் வழங்கியதும் அதை மாநாட்டுத் திடலில் ஏற்றிவைக்கவுள்ளார் முதலவர்.
பின்னர் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்டும் 1,500 இருசக்கர வாகன பேரணி மாநாட்டு பந்தலுக்கு வரவுள்ளது.
இதையும் படியுங்க : DMK youth wing meeting-பிரம்மாண்ட ஏற்பாடுகள்..!
1000 ட்ரோன்களை கொண்டு ட்ரோன் ஷோ, முரசொலி புத்தக நிலையம், அன்பகம் திமுக இளைஞர் அணி வரலாறு சிறப்பு புகைப்பட கண்காட்சி நிலையம் திறப்பு உள்ளிட்டவை நடைபெறவுள்ளது.
இது மட்டும் இன்றி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டிமன்றம், இசைக் கச்சேரி, நடனம், நாடகம் என பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1748623053041676343?s=20
மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெற உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மாநாடு நடைபெறுமிடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.