ITamilTv

5 வருடங்களுக்குப் பிறகு… அம்மன் கோவிலில்..? பரவசத்தில் பக்தர்கள்..!

Spread the love

மேல உத்தமநல்லூர் திரவுபதி அம்மன் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தீமிதி திருவிழா நடந்தது.

அய்யம்பேட்டை அருகே காவிரி ஆற்றங்கரையில் உள்ள மேல உத்தம நல்லூர் கிராமத்தில் பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீமிதி திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் போது கிராமத்து மக்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு விழா பத்திரிகையை நேரில் சென்று கொடுத்து அழைப்பார்கள்.

மேலும், தங்களுடைய வீடுகளை புதுப்பித்து வர்ணம் பூசி. பின்னர் வீடுகள் தோறும் கீற்று கொட்டகைகள் அமைத்து வாழை மரங்கள், தோரணங்கள், இளநீர், நொங்கு, பலா பழங்களை கட்டி கொண்டாடுவார்கள்.

இந்நிலையில், 5 ஆண்டுகளளுக்குப் பிறகு நேற்று முன் தினம் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடியேற்றம் செய்யப்பட்டு அன்று இரவு மகாபாரத கதை சொற்பொழிவு நடைபெற்றது.

பின்னர், மாலையில் விநாயகர், பஞ்ச பாண்டவர்கள் வேடமிட்டு பக்தர்கள் டிராக்டரில் சென்றனர். தேரோட்டியாக டிராக்டரின் ஓட்டுநர் கிருஷ்ணன் வேடம் அணிந்து டிராக்டரை ஒட்டி சென்றார்.

கர்ணன் வேடம் அணிந்த ஒரு நபர் யானை மீது அமர்ந்து கொண்டு சில்லறை காசுகளை பக்தர்கள் கூட்டத்தின் இடையே வீசிச் சென்றார். பக்தர்கள் அதனை போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து, திரவுபதி அம்மன் பரிவார தெய்வங்களுடன் அக்னி குண்டம் நோக்கி புறப்பட்டது.

பின்னர், ஊரின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.


Spread the love
Exit mobile version