நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் திடீரென 17 ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று ஒரே நாளில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் 4 ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், ‘சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தினரும்,
டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் நேற்று இரவில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், அடுத்தடுத்து 17 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர்.
இதையடுத்து அவர்கள் 17 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“எங்கள் கோரிக்கைக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
தமிழகம் முழுவதும் இருந்து 5000 மேற்பட்ட ஆசிரியர்கள் சின்ஹா போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டத்தை தொடர்வோம் என்று கூறினார்.
இதற்கிடையே, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 17 பேர் மயங்கி விழுந்த நிலையில், அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.