ரேஷன் பொருட்கள் ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், ஏழை, எளிய மக்கள் வருவாய் இன்றி பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதையடுத்து, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ரேசன் பொருட்களுடன் கூடுதலாக, 5 கிலோ அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ரேஷன் கடைகள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை வரை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையின் போது, அடுத்தடுத்து இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் இந்த திட்டமானது தற்போது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.