மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் நிறுத்த திடீரென அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் பொங்கல் தைத் திருநாளான ஜன.14 அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அதன்படி இந்த ஆண்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.
இதற்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில், வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள அதே நேரம், நாளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வியெழுந்தது. அதே நேரம் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை நிறுத்தியிருப்பதால், மீண்டும் போட்டியாளர்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டியில் பங்கேற்பவர்கள் மற்றும் பலர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்பவகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பன உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
. இதனிடையே மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.