இன்று 2023 ஆம் ஆண்டு நவம்பர் (26.11.23) ஞாயிற்றுக்கிழமை திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
சிவ பெருமான் இந்த உலகிற்கு “தான் என்ற அகந்தையுடன் இருப்பவர்களால் இறைவனை அடைய முடியாது, இறைவன் ஜோதி வடிவானவன், அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதைஉணர்த்திய தினமே கார்த்திக் தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
அதாவது, ‘அடி முடி காணா சிவனே’ என்ற சொல்லுக்கு வலுசேர்க்கும் விதமாக, சிவனினுடைய அடியையும், முடியையும் காண புறப்பட்டு, தோற்றுப் போன பிரம்மனுக்கும், விஷ்ணுவிற்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் சிவ பெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்த தினத்தை தான் நாம் திருக்கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடி வருகிறோம்.
அதன்படி, கார்த்திகை தீபத்திருநாளான இன்று தீபம் ஏற்ற சரியான நேரம் திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதை தரிசித்து விட்டு, 6.05 மணிக்கு மேல் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். குறைந்தபட்சம் 27 விளக்குகளும், அதிகபட்சமாக எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம்.
நல்லெண்ணெய் மற்றும் ஐந்து வகை எண்ணெய்களை பயன்படுத்தி விளக்கேற்றலாம். ஆனால், குறைந்த பட்சம் ஒரு விளக்காவது நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.
அப்படி விளக்கேற்றும் போது முதல் விளக்கு வாசலின் கோலத்தின் நடுவில் ஏற்ற வேண்டும். வாசல் மற்றும் நிலைவாசலில் விளக்கு ஏற்றிய பிறகு வெளியில் ஏற்றிய ஒரு தீபத்தை எடுத்து வந்து வீட்டிற்குள் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். அதற்கு பின்னர் வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை, கழிவறை, கூடம் என அனைத்து இடங்களிலும் எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம்.
வாசலில் ஏற்றப்பட்ட தீபம் 30 நிமிடங்கள் எரிந்தால் போதுமானது. அதன் பிறகு எடுத்து விடலாம். இதேபோல வீட்டின் பிற இடங்களில் ஏற்றிய தீபத்தில் அடிக்கடி எண்ணெய் விடவோ, திரியை தூண்டி விட வேண்டிய அவசியமோ இல்லை. ஏற்றிய தீபங்கள் தானாக குளிரும் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.